புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பில் 12ஆம் ஆண்டு ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பொன்னமராவதி வர்த்தகர் மஹாலில் நடைபெற்ற பனிரெண்டாம் ஆண்டு ஆசிரியர் தினவிழா மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவிற்கு ஆதிகாலத்து அலங்கார மாளிகை இயக்குநர் ஜெயபால் தலைமை வகித்தார். ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக இயக்குநர் மணிகண்டன், வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், முத்தமிழ்ப்பாசறை குழு செயலாளர் நெ.இரா.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதிகாலத்து அலங்கார மாளிகை இணை நிர்வாக இயக்குநர் அருண் வரவேற்புரை ஆற்றினார். சாகித்ய அகாடமி முன்னாள் உறுப்பினரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் தொடங்கிய ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆசிரியர்களின் பணி அளப்பரியது என்றும் மாணவர்களிடையே நல்லொழுக்கம், நல்வழிபடுத்துதல் போன்ற சவால் மிக்க பணிகளை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள் தான் என்றும் வளர்ந்து வரும் நவீன உலகில் மாணவர்களை கலை, கல்வி, பொருளாதாரம், விளையாட்டு போன்றவற்றில் உயர்த்தி விட வேண்டும் என்று பாடுபடுபவர்கள் ஆசிரியர்கள் தான் என்றும் கலெக்டர் மெர்சி ரம்யா புகழாரம் சூட்டினார்.
மேலும் மாணவச்செல்வங்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஊண்டுகோலாக திகழும் ஆசிரியப்பெருமக்களை பாராட்டி "பெருமை விருதுகளை" புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆசிரியர்களுக்கு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் வட்டாட்சியர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையன், செயலர் அலுவலர் மு.செ.கணேசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், சேதுபதி அம்பலகாரர், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நிர்வாக மேலாளர் வீரையா நன்றி கூறினார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment